ஷா ஆலம், நவ. 17: கடந்த ஆண்டு ஜூன் மாதம், காவலாளி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நடிகர் ஷர்னாஸ் அகமதுவைக், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
அட்டர்னி ஜெனரல் துறையில் (AGC) ஷர்னாஸ் (அஹ்மட் பசீர் அஹ்மட்) வழங்கிய பிரதிநிதித்துவத்தைப் பெற்ற பின்னர் அவரை விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பின் ஜாமீன் பணம் மீண்டும் தரப்படும் என்றும் மாஜிஸ்திரேட் அதிக்கா முகமட் @ முகமட் சைம் தெரிவித்தார்.
ஜூன் 16, 2022 அன்று, கோலாலம்பூரில் உள்ள ஜாலான் டுதாமாஸில் உள்ள ஒரு குடியிருப்பில் இரவு 8.30 மணியளவில் இசுல் இஸ்லாம் அவாங் (27) என்பவருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக ஜுவானா திரைப்பட நடிகர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
38 வயதான ஷர்னாஸ் மீது குற்றவியல் சட்டப் பிரிவு 323 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.








