கோலாலம்பூர், நவ 16- பரம ஏழ்மை நிலையை வரும் 2024ஆம் ஆண்டில் முற்றாகத் துடைத்தொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஆகக் கடைசி நிலவரம் குறித்த கேள்வி இன்றைய மக்களவைக் கூட்ட விவாதத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.
அமைச்சர் கேள்வி நேரத்தின் போது இந்த கேள்வியை தம்பின் தொகுதி பாரிசான் நேஷனல் உறுப்பினர் டத்தோ முகமது இஸாம் முகமது ஈசா பொருளாதார அமைச்சரிடம் முன்வைப்பார்.
இது தவிர நாட்டின் நடப்பு வறுமை விகிதம் மற்றும் 2022ஆம் ஆண்டில் இனவாரியான குடும்ப வருமான விகிதம் குறித்து விளக்கும்படி அவர் அமைச்சரைக் கேட்டுக் கொள்வார்.
மலேசியாவிலுள்ள விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பயணச் சேவை மற்றும் கையாளப்படும் பயணிகள் எண்ணிக்கை குறித்தும் பயணச் சேவையில் ஏற்படும் தாமதம் மற்றும் ரத்து போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் போக்குவரத்து அமைச்சரிடம் சிபு தொகுதி ஹராப்பான் வேட்பாளர் ஆஸ்கார் லிங் சாய் லியு கேள்வியெழுப்புவார்.
கேள்வி நேரத்தின் போது, உள்நாட்டு அரிசிப் பற்றாக்குறைப் பிரச்சனை நாட்டில் மீண்டும் எழாதிருப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சரிடம் டாமன்சாரா தொகுதி ஹராப்பான் உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ வினா தொடுப்பார்.
புறநகர்ப் பகுதிக்கான மின்சார விநியோகத் திட்டத்திற்காக செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு, இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட இடங்கள், இதன் அமலாக்க காலம் மற்றும் கடந்த 2023 ஜூன் மாதம் வரையிலான இத்திட்டத்தின் அடைவு நிலை குறித்து கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் ஜெலி தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ஜஹாரி செக்சிக் கேள்வியெழுப்பவிருக்கிறார்.








