ஜித்ரா, அக் 23- சங்லுனில் கடந்த 18ஆம் தேதி போலீசார் மேற்கொண்ட
அதிரடிச் சோதனையில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டதோடு
அவர்களிடமிருந்து 8.5 கிலோ ஷாபு என நம்பப்படும் போதைப் பொருள்
பறிமுதல் செய்யப்பட்டது.
பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட
போலீசார் இம்மாதம் 18ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் சங்லுனில்
உள்ள வீட்டின் எதிரே 28 வயது ஆடவரை கைது செய்ததாக கெடா மாநில
குற்றப்புலனாய்வுத் துறையின் தலைவர் ஏசிபி முகமது தவுபிக் மைடின்
கூறினார்.
அந்த ஆடவனிடமிருந்த பேக்கை சோதனையிட்ட போது அதில் போதைப்
பொருள் அடங்கிய எட்டு பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருப்பது
கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைதான ஆடவன் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட
போலீசார் சங்லுனில் உள்ள உணவகம் ஒன்றின் எதிரே 20 வயதுடைய
அவரின் மனைவியை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 152,214 வெள்ளி
மதிப்புள்ள கார் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற நேற்று
இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
உணவகத்தில் உதவியாளர்களாக வேலை செய்து வந்த அவ்விருவர் மீதும்
மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப் பழக்கத்தை அவர்கள்
கொண்டிருப்பது தெரிய வந்தது தெரிய வந்ததாக அவர் சொன்னார்.
அவ்விருவரும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்
39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக வரும் ஆக்டோபர் 25ஆம் தேதி வரை
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.








