கோலாலம்பூர், அக் 20- பொதுத் துறையில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டப் பதவிகளில் உள்ளப் பெண்களின் எண்ணிக்கை தற்போது 38.8 விழுக்காடாக உள்ளதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.
எனினும், தனியார் மற்றும் பெரு வர்த்தகத் துறைகளில் 30 விழுக்காட்டுப் பெண்கள் இத்தகைய பதவிகளை வகிக்க வேண்டும் என்ற இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இவ்வாண்டு முதன் முறையாக நேற்று நடைபெற்ற தேசிய பெண்கள் மற்றும் குடும்ப மன்றக் கூட்டத்தில் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மடாணி பொருளாதாரக் வடிவமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஆள்பலச் சந்தையில் 60 சதவீத பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக பெண்கள் மீண்டும் வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் அம்சங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூருடன் ஒப்பிட்டுகையில் அங்கு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே நாங்கள் உயர்ந்த பட்ச நிலையை அடைய விரும்புகிறோம். இந்த இலக்கை அடைய சம்பள அடிப்படையில் நாம் ஆதரவளிக்க வேண்டும் என்று நான்சி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த வாரம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்ட மீண்டும் பணிக்குத் திரும்பும் பெண்களுக்கான வரிச் சலுகைகளை எதிர்வரும் 2027 டிசம்பர் 31, 2027 வரை நீட்டிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.








