கோலாலம்பூர், அக் 19- காஸாவில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க
மலேசியா தனது சக நாடுகளுடன் இணைந்து அனைத்து அரசதந்திர முயற்சிகளையும்
பயன்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பாலஸ்தீன விவகாரத்தில் மலேசியாவின் அர்ப்பணிப்பு குறித்து எந்த சந்தேகமும்
இருக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார். மலேசியா சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதை நம்புகிறது.
பாதுகாப்பு மற்றும் சுபிட்சம்என்பது நாடுகளுக்கிடையேயான தொடர்புகளை நிர்வகிக்கும் விதிகளின் முன்னுரிமையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று 14வது சட்ட சங்கத்தின் 2023ஆம் ஆண்டிற்கான பொதுப்பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் கூறினார்.
அனைத்துமே சட்டத்துடன் தொடர்புடையது. ஏனென்றால் இந்த ஆபத்தான தருணத்தில் நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டியது இதுதான். குறிப்பாக அனைத்துலக உத்தரவுகளுகேற்ப விதிகளைப் பின்பற்றுவதாக எப்போதும் விரைந்து கூறும் உலகின் நாடுகள் இஸ்ரேல் என வரும்போது பேச்சுவார்த்தைகளை அப்படியே விட்டு விடுகின்றன என அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பிரதமர் துறை அமைச்சர் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்)
டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் மற்றும் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசியான் முன்னெடுப்புகளைத் தொட்டு பேசிய பிரதமர் , கல்வி, வேலைவாய்ப்பு
மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாலின சமத்துவத்தை
ஊக்குவிக்கும் மற்றும் நிலைநிறுத்தும் கொள்கைகளுக்காக ஆசியான் நாடுகள் போராட
வேண்டும் என்றார்.
எனவே, பெண்களின் பங்களிப்பிற்கு இடமும், கவனமும் அளித்து, அவர்களின் திறனை
அடையாளம் கண்டு, அவர்களை வழிநடத்தவும், புதுமைப்படுத்தவும் சம வாய்ப்புகளை
ஆசியான் வழங்க வேண்டும் என்று அவர் சொன்னார்.








