கோலாலம்பூர், அக் 19- பத்துகேவ்ஸ் பகுதியில் கடந்த ஞாயிறன்று
மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் 31 லட்சம் வெள்ளி மதிப்புள்ள
93.8 கிலோ மெத்தம்பெட்டமின் வகை போதைப் பொருளை போலீசார்
கைப்பற்றினர்.
இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் உள்நாட்டு ஆடவர் மற்றும்
இந்தோனேசியப் பிரஜை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர்
மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
அவ்விருவரும் அனைத்துலகக் கும்பலிடம் போதைப் பொருள்
விநியோகிப்பாளர்களாக வேலை செய்து வந்தது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் வடக்கிலுள்ள அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்படும்
போதைப் பொருளை இந்தோனேசிய சந்தைக்கு இக்கும்பல் அனுப்பி
வந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் இக்கும்பல் தீவிரமாகச் செயல்பட்டு
வந்துள்ளது என்று அவர் சொன்னார்.
போதைப் பொருள் தவிர்த்து மூன்று வாகனங்கள் மற்றும் 500 வெள்ளி
ரொக்கத்தை அக்கும்பலிடமிருந்து தாங்கள் பறிமுதல் செய்ததாகக் கூறிய
அவர், அக்கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த
மதிப்பு 32 லட்சத்து 20ஆயிரம் வெள்ளியாகும் என்றார்.
வாகன பழுதுபார்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள 34 வயது உள்நாட்டு
ஆடவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு பொது மக்கள் அளித்த
புகாரின் அடிப்படையில் அன்றைய தினம் இரவு 9.35 மணியளவில்
தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த ஆடவரைக் கைது செய்ததாக
அவர் சொன்னார்.
அந்த ஆடவர் கொடுத்த தகவலின் பேரில் அருகிலுள்ள கார்
நிறுத்துமிடத்தில் இருந்த நிசான் அல்மிரா காரை சோதனையிட்ட
போலீசார் காரின் பின்புற இருக்கை மற்றும் பொருள் வைக்கும் பகுதியில்
போதைப் பொருள் அடங்கிய நான்கு கேன்வஸ் பைகள் மற்றும் ஒரு
மூட்டையைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் அருகிலுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில்
மேற்கொள்ளப்பட் மற்றொரு சோதனையில் 42 வயதுடைய இந்தோனேசிய
ஆடவர் கைது செய்யப்பட்டார் என அவர் மேலும் சொன்னார்.








