கோலாலம்பூர், அக் 18- முன்னாள் இராணுவ வீரர்கள்
எதிர்நோக்கியிருக்கும் வாழ்க்கைச் சுமை, மலேசியப் பொருள்களை
வாங்குவோம் இயக்கம் மற்றும் இணைய மோசடி உள்ளிட்ட விவகாரங்கள்
இன்றைய மக்களவை விவாதத்தில் முக்கிய இடம் பெறும்.
ஓய்வூதியம் பெறும் அல்லது ஓய்வூதியம் பெறாத முன்னாள் இராணுவ
வீரர்களின் நலனைக் காப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
குறித்து தற்காப்பு அமைச்சரிடம் சிகாமாட் தொகுதி பக்கத்தான் ஹராப்பான்
உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் கேள்வியெழுப்புவார்.
வாய்மொழிக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அங்கத்தின் போது
யுனேஸ்வரன் இந்த கேள்வியை முன்வைப்பார் என்று நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியப் பொருள்களை வாங்குங்கள் இயக்கம் தொடர்பான கேள்வியை
உலு திரங்கானு தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ
ரோசோல் வாஹிட் முன்வைக்கவுள்ளார்.
நாடு பொருளாதார மந்த நிலையை எதிர்நோக்கியிருக்கும் இன்றையச்
சூழலில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு புத்துயிரூட்டுவதற்கு
ஏதுவாக மலேசியப் பொருள்களை வாங்குங்கள இயக்கத்தை பெரிய
அளவில் நடத்துவதற்கான சாத்தியம் குறித்து அவர் கேள்வியெழுப்புவார்.
ஸ்கேம்மர் எனப்படும் இணைய மோசடி காரணமாக இவ்வாண்டில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இழப்பின் மதிப்பு குறித்து
தாமான் மேரா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோஸ்ரீ
இக்மால் ஹிஷாம் அப்துல் அஜிஸ் பிரதமரிடம் வினவுவார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் சமர்பிப்பித்த 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்
தொடர்பான விவாதம் இன்று மூன்றாவது நாளாகத் தொடரும்.








