ஜொகூர் பாரு, அக் 18- பூலாயில் உள்ள ஒரு வீட்டில் எழு வயதுச்
சிறுவன் சித்திரவதை செய்யப்பட்டது தொடர்பில் அச்சிறுவனின்
தந்தையும் அவரின் காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய நபரையும் 39 வயது நிரம்பிய
அவரின் காதலியையும் தாங்கள் விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளதாக
இஸ்கந்தார் புத்ரி மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மாட் அரிபின்
கூறினார்.
நேற்று மாலை 4.13 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து
அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
அந்த சிறுவன் உடல் மெலிந்தும் சக்தியற்ற நிலையிலும் வீட்டின்
கழிப்பறையில் இருப்பதைக் கண்ட பெண்மணி ஒருவர் இது குறித்து
போலீசில் புகார் செய்தார் என அவர் சொன்னார்.
அந்த சிறுவனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த
பரிசோதனை செய்ததில் உடல் முழுவதும் அடித்ததால் ஏற்பட்ட
காயங்களும் பழைய காயத் தழும்புகளும் காணப்பட்டன. இதனைத்
தொடர்ந்து அந்த காதல் ஜோடியை நாங்கள் கைது செய்தோம் என்றார்
அவர்.
பள்ளிப்படிப்பை மேற்கொள்ளாத அச்சிறுவன் தன் தந்தை மற்றும் அவரின்
காதலியுடன் வசித்து வந்துள்ளதாக ரஹ்மாட் தெரிவித்தார்.
தற்போது சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்
அச்சிறுவனின் உடல் நிலை சீராக இருந்து வருவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.








