கோலாலம்பூர், அக் 18 - அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான புகார்களைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அல்லாமல் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் அதிகாரப்பூர்வத் தளங்கள் மூலம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமூக ஊடகங்கள் வாயிலாகச் செய்யப்படும் புகார்கள் அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் என்று அதன் துணை அமைச்சர் பவுசியா சாலே கூறினார்.
சில நேரங்களில், வலைத்தளவாசிகள் பிரச்சனைகளை சமூக ஊடகங்கள் மூலம் புகார் அளிக்க விரும்பினால், அது நடவடிக்கை செயல்முறையை தாமதப்படுத்தும். அதற்கான முறையான தளங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் அமைச்சிடம் புகார்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
உதாரணத்திற்கு, ஒரு புகார் வைரலாக மாறினால், அதை யார் தொடங்கினார்கள்... அந்த தகவலின் ஆதாரம் எது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். விசாரணையைத் தொடங்குவதற்கு முன் நாங்கள் அவர்களைச் சந்திக்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.
நேற்று செராஸ் ஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் ஓப்ஸ் ஜாமீன் இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
விநியோகம் தொடர்பான புகார்களை கியூ.ஆர். குறியீடு மூலம் பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு தளம் உள்ளது. உள்நாட்டு வர்த்தக அமைச்சின் வாட்ஸ்ஆப் ஹாட்லைனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த தளத்தை அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகவும் அணுக முடியும் என்றார். அவர்.
விநியோகப் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இந்த பிரத்தியேகத் தளத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். அதே நேரத்தில் அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் புகார்களைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் விசாரணைகளை நடத்துவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.








