ஷா ஆலம், அக் 12- எல்லை கடந்த புகை மூட்டப் பிரச்சனைக்கு
காரணமாக விளங்கும் நிறுவனங்கள் அல்லது நாடுகளுக்கு எதிராக
நடவடிக்கை எடுப்பதற்கு பிரத்தியேகச் சட்டம் ஏதும் கிடையாது.
இருப்பினும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரச தந்திர மற்றும்
கலந்துரையாடல் அணுகுமுறையை அரசாங்கம் கையாள்வதாக இயற்கை
வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக்
அகமது கூறினார்.
மற்றவர்களை குற்றஞ்சாட்டுவதன் வாயிலாகவே சட்ட அமலாக்கத்தின்
மூலமாகவோ புகைமூட்டப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இதன்
தொடர்பில் அண்டை நாட்டிடம் மலேசியா அரச தந்திர குறிப்பை
வழங்கியுள்ளதோடு அந்நாட்டில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்கும்
உதவி வருகிறது என்றார் அவர்.
இந்தோனேசியாவில் திறந்த வெளி தீயிடல் சம்பவங்களில்
சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களை அரசாங்கம் ஒருபோதும் தற்காக்காது
என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று பாகான் செராய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் டத்தோ இட்ரிஸ் அகமது எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
எல்லை கடந்த புகைமூட்டப் பிரச்சனை தொடர்பான ஆசியான்
ஒப்பந்தத்தை சீரமைக்க மலேசியா விருப்பம் கொண்டுள்ளதோடு எல்லை
கடந்த புகைமூட்ட மாசுபாடு சட்டத்தை உருவாக்குவது குறித்தும்
ஆலோசித்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.








