சிப்பாங், அக் 12- தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தாவிசின்
மலேசியாவுக்கான இரு நாள் பணிநிமித்தப் பயணத்தை முடித்துக்
கொண்டு இன்று காலை சிங்கப்பூர் புறப்பட்டார்.
இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பூங்கா
ராயா முனையம் வழியாக சிறப்பு விமானத்தில் இன்று காலை 9.00
மணியளவில் பயணமாகும் முன்னர் அரச ரேஞ்சர் பட்டாளத்தின்
(சம்பிரதாய காலாட்படை) முதலாவது பிரிவைச் சேர்ந்த 28 அதிகாரிகள்
மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் மரியாதை அணிவகுப்பை
அவர் ஏற்றுக் கொண்டார்.
துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது அலாமின் மற்றும்
தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் டத்தோ ஜோஜி சாமுவேல் ஆகியோர்
அவரை வழியனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் 5ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ஸ்ரேத்தா
தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அண்டை நாடான மலேசியாவுக்கு
வருகை மேற்கொண்டார்.
மலேசிய வருகையின் போது அவர் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-
சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவை
மரியாதை நிமித்தம் சந்தித்ததோடு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிமுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும்
விவாதித்தார்.








