புத்ராஜெயா, அக் 7: வாகன (சில வகை கண்ணாடிகள் மீதான தடை) விதிகள் 1991 (திருத்தம் 2019) இன் கீழ் அரசிதழில் வெளியிடப் பட்டுள்ள கறுப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளுக்கு இணங்குமாறு தனியார் வாகன உரிமையாளர்களுக்கு சாலைப் போக்கு வரத்துத் துறை (ஜேபிஜே) நினைவூட்டுகிறது.
வாகன கண்ணாடிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஒளி வெளிப்படைத்தன்மை விகிதம் (VLT) வாகனத்தின் முன் கண்ணாடிக்கு 70 சதவீதமாகவும், ஓட்டுநரின் இடது மற்றும் வலது பக்க கண்ணாடிக்கு 50 சதவீதமாகவும், பின் பக்க கண்ணாடி மற்றும் பின்புற கண்ணாடிக்கு 0 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.
விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களுக்கு RM2,000க்கு மேல் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது முதல் குற்றத்திற்காக ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதே சமயம் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளுக்கு RM4,000 அபராதம் அல்லது 12 மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரணடும் விதிக்கப்படலாம்.
பாதுகாப்பு அல்லது உடல்நலக் காரணங்களுக்காக எந்தவொரு நபரும் கறுப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலுக்குத் தபால் அல்லது ஜேபிஜே போர்ட்டல், www.jpj.gov.my மூலம் விண்ணப்பிக்கலாம் என ஜேபிஜே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
"ஒப்புதல் கிடைக்கும் வரை, எந்தவொரு தனிநபரும் தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கறுப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துவதற்கான விதிகளைப் பின்பற்றத் தவறும் ஓட்டுநர்கள் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று ஜேபிஜே தெரிவித்தது``.
– பெர்னாமா








