போர்ட்டிக்சன், செப் 27- நாட்டில் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு
ஏதுவாக அதிக நெல் நடவுப் பகுதிகளைத் திறக்கும்படி மாநில அரசுகளை
விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு விவசாய மற்றும் உணவு
உத்தரவாத அமைச்சு, நிதியமைச்சு, உள்நாட்டு வர்த்தக மற்றும்
வாழ்க்கைச் செலவின அமைச்சுகளின் ஒத்துழைப்புத் தேவைப்படுவதாக
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
சபா மற்றும் சரவா உள்ளிட்ட பல மாநிலங்களும் நெல் நடவுப் பகுதிகளை
அதிகளவில் திறப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளன. இது தவிர,
நெகிரி செம்பிலானில் கைவிடப்பட்ட நெல் விவசாயப் பகுதிகளில்
மீண்டும் நடவுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீர்பாசன
வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தையும் கண்டறியலாம் என அவர்
தெரிவித்தார்.
நெல் மற்றும் அரிசி விவகாரம் தனிப்பட்ட ஒருவரின் பொறுப்பல்ல.
மாறாக அது நாட்டின் அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும். உணவுப்
பாதுகாப்பை உறுதி செய்வதில் கூட்டரசு அரசாங்கம், மாநில அரசுகள்
மற்றும் தனியார் துறையினரும் பங்களிப்பை வழங்க வேண்டும். இது
நாட்டின் மற்றும் உலகின் பிரச்சனை. இதனால் ஏற்படும் சுமையைக்
குறைப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
நில அதிகாரம் மாநில அரசின் வசம் உள்ளதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி
மாநிலங்கள் என்ற வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க
வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாடா எனப்படும் மூடா விவசாய மேம்பாட்டு வாரியத்தின் வாயிலாக
ஈராண்டுகளுக்கு ஐந்து முறை நெல் பயிரிடும் வகையில் நீர் பாசன
வசதிகளை நாம் ஏற்படுத்தித் தருவோம். இந்த திட்டத்தை இவ்வாண்டில்
தொடங்க முடியாது. அடுத்தாண்டில் இதனை அமல்படுத்த முடியும்.
அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இதனை வெற்றிகரமாக
மேற்கொள்ள இயலும் என்று அவர் மேலும் கூறினார்.








