ஷா ஆலம், செப் 16- கடந்த 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலேசியா உருவாக்கம் காண்பதற்கு வழிகோலிய கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நாட்டை இன்னும் முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மலேசியர்கள் அனைவருக்கும் தனது மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், “ நாம் மலேசியாவின் உருவாக்கத்தை வரவேற்கிறோம். அனைத்து மக்களுக்கும் நீடித்த அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்“ முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் கூறிய வார்த்தைகளை நினைவுக்கூர்ந்தார்.
கடந்த 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி நாட்டிலுள்ள ஒரு கோடி மக்களின் கனவுகளை பகிர்ந்து கொண்ட குரல் அது. உலகக் கனவுகளுடன் புதிய சுதந்திர தேசத்தின் உருவாக்கத்திற்கு உந்து சக்தியாக இருந்த வார்த்தைகள் அவை என்றார் அவர்.
இப்போது நாம் புன்னகைக்கலாம், பெருமிதம் கொள்ளலாம். ஆனால் இது நாம் மனநிறைவுக் கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. ஏனென்றால் நாளையும் இருக்கிறது, நாம் கடந்து செல்ல வேண்டிய தொலைவும் இருக்கிறது என்று கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
தனி மனிதர்களின் பின்னணி வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களும் ஒன்று பட்டு ஒரே குடும்பத்தைப் போல் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் சுபிட்சம், அமைதி மற்றும் வெற்றி தொடர்ந்து நிலைத்திருப்பதை அனைத்து மக்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








