சுக்காய், செப் 16- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணம் செய்த நான்கு சக்கர இயக்க வாகனம் மீது லோரி மோதியதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவம் இங்குள்ள ஜெராங்காவ்-ஜாபோர் சாலையின் 154வது கிலோ மீட்டரில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிகழ்ந்தது.
வாகன ஓட்டுநரான அம்மிர் ஹூசேன் முகமது (வயது 38), அவரின் பிள்ளைகளான அம்ஸார் ஹூஸோர் அல் ஹூசேன் (வயது 4) மற்றும் அம்ஸார் ஹூஸ்னாயான் அல் ஹூசேன் (வயது 1) ஆகியோரே இவ்விபத்தில் பலியானவர்கள் என்று கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹன்யான் ரம்லான் கூறினார்.
அம்மிர் ஹூசேனின் மனைவி நோர்ஹாபிஷா சஸ்வா ஹருண் (வயது 38), வளர்ப்பு மகனான அம்ஸார் அமிர் ஹூசேன் அப்துல் ஹஷிம் (வயது 8) ஆகியோர் இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளாயினர் என்று அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களுக்கு சோப்புகளை விநியோகிப்பதற்காக அம்மிர் தனது குடும்பத்தினருடன் தாமான் புக்கிட் குவாங் பெர்மாயில் இருந்து செனே நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது எதிரே வந்த மணல் லோரி திடீரென பிரேக் செயலிழந்து எதிர்த்தடத்தில் வந்த நான்கு சக்கர இயக்க வாகனத்துடன் மோதியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் காயங்களுக்குள்ளான இருவர் கெமாமான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.








