கோலாலம்பூர், செப் 16- அரச மலேசிய ஆகாயப்படை பசிபிக் விமானப்படையுடன் இணைந்து "கோப் தவ்ஃபான் 2023" என்னும் பயிற்சியை இன்று செப்டம்பர் 16 தொடங்கி 29 வரை நடத்தவுள்ளது.
இந்த காலகட்டத்தில் பினாங்கு, பகாங் மற்றும் பேராக் உள்ளிட்ட பல மாநிலங்களில் வான்வெளி சம்பந்தப்பட்ட பயிற்சிப் பகுதிகளாக அரசாங்க பதிவேட்டில் வெளியிடப் பட்டுள்ள பகுதிகளில் அரச மலேசிய ஆகாயப்படையும் பசிபிக் விமானப் படையும் விமானப் பயிற்சிகளை நடத்தும் என்று ஆர்.எம்.ஏ.எஃப். ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய இறையாண்மை பாதுகாப்பதில் ஆகாயப் படையின் தயார் நிலையை வலுப்படுத்துவது மற்றும் இரு விமானப் படைகளுக்கும் இடையே செயல்பாடுகள், தகவல் பகிர்வு, ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது ஆகியவற்றை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பயிற்சி போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் போர் விமானங்கள் காணப்பட்டால் அது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஆகாயப் படை அறிவுறுத்தியுள்ளது.








