ஜோர்ஜ் டவுன், செப் 8- ஜாலான் டத்தோ கிராமாட்டில் உள்ள எட்டு
இரட்டை மாடி வரிசைக் கடைகள் நேற்றிரவு ஏற்பட்ட தீயில் அழிந்தன.
இந்த தீச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 8.04 மணிக்கு தாங்கள் தகவலைப்
பெற்றதாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கை அதிகாரி அஸிலான் ஹசான் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையத்திலிருந்து
முதல் குழு தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த போது பிரசித்தி பெற்ற நாசி கண்டார்
உணவகம் எதிரே உள்ள கடைகளில் தீ கொளுந்து விட்டு எரிவதை
தீயணைப்பு வீரர்கள் கண்டனர். விரைந்து செயல்பட்ட அவர்கள் தீயைக்
கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர் என்று அவர்
தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 4,800 சதுர அடி கொண்ட எட்டு வரிசைக் கடைகள்
பாதிக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் உயிருடச்
சேதம் ஏற்பட்டதாக இதுவரை புகார் பெறப்படவில்லை என்றார் அவர்.
கடுமையானப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீ
அருகிலுள்ள இதர கடைகளுக்கும் பரவாமல் தடுத்ததாக கூறிய அவர்,
தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என்றார்.
தீயை அணைக்கும் பணியில் லெபோ பந்தாய், பாகான் ஜெர்மால், பாயான்
பாரு, பண்டார் பெர்டா, சுங்கை பாக்காப் தீயணைப்பு நிலையங்கள் மற்றும்
தன்னார்வலர் தீயணைப்பு குழுவைச் சேர்ந்த சுமார் 100 அதிகாரிகளும்
உறுப்பினர்களும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.








