அம்பாங் ஜெயா, ஆக 28- நேற்று நடைபெற்ற புக்கிட் அந்தாரா
பங்சா தொகுதி நிலையிலான ஜெலாஜா ஏசான் ரஹ்மா மலிவு
விற்பனையில் இரண்டே மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட கோழிகள்
விற்றுத் தீர்ந்தன.
பொது மக்களிடமிருந்து கிடைத்து வரும் அமோக ஆதரவைத் தொடர்ந்து
இத்தொகுதியில் மாதம் ஒரு முறை இந்த மலிவு விற்பனையை நடத்த
தாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கம்போங் மிலாயு அம்பாங் கிராமப்
பிரதிநிதித்துவ மன்றத்தின் தலைவர் டாயிங் முகமது நஜிப் பாச்சோக
கூறினார்.
இந்த மலிவு விற்பனையில் 300 முதல் 400 வருகையாளர்களுக்கு மட்டுமே
நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால் இதில் கலந்து
கொண்டவர்கள் எண்ணிக்கை அதையும் தாண்டி விட்டது.
இந்த விற்பனையின் போது சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம்
சார்டின், தக்காளி, மாவு உள்ளிட்ட உலர் உணவுப் பொருள்களையும்
விற்பனைக்கு வைத்திருந்தது. இதன் மூலம் பொது மக்கள் பணத்தை
மிச்சப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டியது என அவர் சொன்னார்.
இந்த மலிவு விற்பனையை அதிக தடவை அதாவது மாதம் ஒரு முறை
நடத்த விரும்புகிறோம். எனினும், பி.கே.பி.எஸ். செய்யும் இட
ஒதுக்கீட்டைப் பொறுத்தே இது சாத்தியமாகும் என அவர் குறிப்பிட்டார்.
கம்போங் ஸ்ரீ தஞ்சோங் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனையின் போது காலை 9.00 மணிக்கே 250 வரிசை எண்களும் தீர்ந்து
விட்டதாக கூறிய அவர், விற்பனைக்கு வைக்கப்பட்ட அனைத்துப்
பொருள்களும் விற்றுத் தீர்ந்து விட்டதால் நண்பகல் 12.00 மணிக்கே இந்த
விற்பனையை தாங்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாகச் சொன்னார்.








