ஷா ஆலம், ஆக 24- பண்டார் பாரு கிள்ளான் தொகுதியில் இருபதுக்கும்
மேற்பட்ட முறை நடத்தப்பட்ட ஜூவாலான் ஏசான் ரஹ்மா மலிவு
விற்பனையின் வாயிலாக அத்தொகுதியைச் சேர்ந்த எட்டாயிரத்திற்கும்
மேற்பட்டோர் பயனடைந்தனர்.
இவ்வாண்டு தொடங்கி இன்று வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெங் ஃபெய் கூறினார்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் வசிக்கும் இடங்களை
இலக்காக கொண்டு இந்த மலிவு விற்பனை நடத்தப்படுவதாக அவர்
சொன்னார்.
இந்த மலிவு விற்பனை நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் பொது மக்கள்
மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பொருள்களை வாங்குவதோடு
விற்கப்படும் பொருள்களின் விலை மற்றும் தரம் குறித்தும் மனநிறைவு
தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மலிவு விற்பனை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள்
விரும்புகின்றனர். கிள்ளான் உத்தாமா, தாமான் ஸ்ரீ பெக்கான், பத்து பிலா,
பங்சாபுரி செம்பாக்கா உள்ளிட்ட இடங்களை இலக்காக கொண்டு இந்த
மலிவு விற்பனையை மாதம் நான்கு முறையாவது நடத்துவதற்கு
நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
இங்குள்ள தாமான் ஸ்ரீ பெக்கான், சூராவ் அல்-ஃபாலாவில் இன்று காலை
நடைபெற்ற ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையின் போது சிலாங்கூர்
கினியிடம் அவர் இதனைக் கூறினார்.
பொது மக்களைச் சந்திப்பதற்குரிய வாய்ப்பாக மலிவு விற்பனையைத் தாம்
பயன்படுத்திக் கொள்வதோடு மாநில அரசின் மக்கள் நலத்
திட்டங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்து வருவதாக டாக்டர் குவா
தெரிவித்தார்.








