கிரீக், ஆக 24- கிரீக் மற்றும் ஜெலியை இணைக்கும் கிழக்கு- மேற்கு
நெடுஞ்சாலையை தரம் உயர்த்த கூடுதலாக 3 கோடி வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அறிவித்துள்ளார்.
அந்த சாலையைச் சீரமைப்பதற்கு 8 கோடி முதல் 10 கோடி வெள்ளி
தேவைப்படும் என மதிப்பிடப்படும் நிலையில் மேலும் 3 கோடி வெள்ளி
அப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
நாடு முழுவதும் உள்ள சாலைகளைச் சீரமைப்பதற்கு நிதி கோரி அதிக
விண்ணப்பங்களைத் தாம் பெற்று வருவதாகக் கூறிய அவர், வரும்
அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள மடாணி அரசாங்கத்தின்
இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தில் அந்த விண்ணப்பங்கள்
பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
எனினும், இந்த சாலையைச் செப்பனிடுவதற்கு கூடுதலாக 3 கோடி
வெள்ளியை வழங்க நான் ஒப்புதல் அளிக்கிறேன் என்று அவர் மேலும்
கூறினார்.
இன்று இங்கு பொதுப்பணித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற
மைஜாலான் இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கியும் கலந்து
கொண்டார்.
அந்த சாலையை சீரமைக்கும் பணிகளுக்காக பொதுப்பணி அமைச்சு
தொடக்கக் கட்டமாக 3 கோடி வெள்ளியை வழங்குவதாக நந்தா
முன்னதாக கூறியிருந்தார்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள கூட்டரசு சாலைகளைச்
சீரமைப்பதற்கு அரசாங்கம் இவ்வாண்டில் 37 கோடி வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளதாக அன்வார் சொன்னார்.
அவற்றில் 30 கோடி வெள்ளி நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களின்
ஒப்பந்தத்தில் இடம் பெறாத கூட்டரசு சாலைகளைப் பராமரிப்பதற்கு
பயன்படுத்தப்படும் என அவர் விளக்கினார்.








