கோலாலம்பூர், ஆக 24- பகாங் மாநிலத்தின் பெலாங்கை சட்டமன்றத்
தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி நடைபெறும்
என தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்.) அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 23ஆம்
தேதியும் தொடக்க வாக்களிப்பு அக்டோபர் 3ஆம் தேதியும் நடைபெறும்
என்று எஸ்.பி.ஆர். தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே கூறினார்.
பெலாங்கை இடைத் தேர்தல் தொடர்பில் புத்ரா ஜெயாவிலுள்ள மெனாரா
எஸ்.பி.ஆர். கட்டிடத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த சிறப்புக்
கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.
பெலாங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ ஜோஹாரி
ஹருண் இம்மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்த விமான விபத்தில்
பலியானதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பெலாங்கை தொகுதி எதிர்பாராத வகையில் காலியானது தொடர்பல் பகாங்
மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ முகமது சர்கார்
சம்சுடினிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவலைத் தாங்கள் பெற்றுள்ளதாக
எஸ்.பி.ஆர். கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தது.
கடந்த வாரம் வியாழக்கிழமை ஷா ஆலம் பண்டார் எல்மினாவில்
நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் பலியான பத்து பேரில் டத்தோஸ்ரீ
ஜோஹாரியும் ஒருவராவார். 53 வயதான ஜோஹாரி பகாங் மாநில
ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் தேசிய
முன்னணி வேட்பாளரான ஜோஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையில்
அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.








