ஈப்போ, ஆக 24- செமோர், கிளேபாங் ஏயோன் மால் பேரங்காடிக்கு போலி
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பில் 38 வயது ஆடவரை
போலீசார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டவரான அந்த ஆடவர் நேற்று இங்குள்ள தாசேக் பகுதியில் கைது
செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா
ஹசான் கூறினார்.
திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதற்கு
பயன்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு கருவியிலிருந்து பெறப்பட்ட
தகவல் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நபரே இந்த போலி
மிரட்டலுக்கு காரணமாக இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டது என்று
அவர் சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 507வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட
நபரை விசாணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணை இன்று
பெறப்படும் என்றார்.
இதனிடையே, இந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் அந்த
பேரங்காடி முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில்
சந்தேகத்திற்குரிய எந்தப் பொருளும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று
யாஹ்யா தெரிவித்தார்.
அந்த பேராங்காடி பாதுகாப்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டப் பின்னர்
இரவு 10.30 மணியளவில் அனைத்து ஊழியர்களும் உள்ளே செல்ல
அனுமதிக்கப்பட்டதாக அவர மேலும் குறிப்பிட்டார்.
வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை 5.30 மணியளவில் வந்த
அனாமதேய தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அந்த
பேரங்காடியிலிருந்த அனைத்து வாடிக்கையாளர்களும் ஊழியர்களும்
வெளியேற்றப்பட்டு வர்த்தகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.




