புத்ரா ஜெயா, ஆக 17- கோழி விநியோகத்தில் பற்றாக்குறை நிலவுவதாக
வெளிவந்த புகார்களைத் தொடர்ந்து அந்த அத்தியாவசிய உணவுப்
பொருளின் விலை உயர்வு கண்டுள்ள நிலையில் பண்ணை அளவில்
கோழி விநியோகத்தில் பற்றாக்குறை நிலவவில்லை என்று கால்நடைச்
சேவைத் துறை கூறியுள்ளது.
கோழிகள் அதிகளவில் இறப்பதற்கு காரணமான நோய் பரவல்
தொடர்பிலும் தாங்கள் எந்த புகாரையும் பெறவில்லை என்று அத்துறை
தெரிவித்தது.
ஆகவே, கோழி பற்றாக்குறை தொடர்பான தகவல்களைக் கேட்டு
பதட்டமடைய வேண்டாம் என பொதுமக்களை அத்துறை அறிக்கை
ஒன்றின் வாயிலாக கேட்டுக் கொண்டது.
விநியோகப் பற்றாக்குறை காரணமாக கோழியின் விலை உயர்வு
கண்டுள்ளதாக வெளிவந்த பத்திரிகைத் தவல்கள் தொடர்பில் அத்துறை
இந்த விளக்கத்தை அளித்தது.
அண்மைய சில தினங்களாக கோழி விநியோகப் பற்றாக்குறை நிலவி
வருவதாகவும் இதன் காரணமாக சந்தைகளில் கோழியின் விலை வெ. 9.00
முதல் வெ.9.28 வரை உயர்வு கண்டுள்ளதாகவும் அந்த செய்தியில்
கூறப்பட்டிருந்தது.
கோழி பற்றாக்குறை நிலவும் பட்சத்தில் அது குறித்து மாவட்ட/ மாநில
கால் நடை சேவைத் துறை அல்லது மாநில கால்நடைச் சேவைத்
துறையிடம் தகவல் அளிக்கும்படி பொது மக்கள் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.








