கோலாலம்பூர், ஆக 17 - மலேசியாவும்
சிங்கப்பூரும் தற்போதைய ஒத்துழைப்பு
பகுதிகளுக்கு அப்பாற்பட்டு நீடித்த
நிலைத்தன்மை, பருவநிலை மாற்றம்,
இலக்கவியல் பொருளாதாரம் போன்ற புதிய
துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும்
என்று மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர்
வேணு கோபால மேனன் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் சிங்கை குடியரசுக்குச்
சென்றபோது இலக்கவியல் பொருளாதாரம், பசுமைப்
பொருளாதாரம் மற்றும் இணையப் பாதுகாப்பு
ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும்
இடையே கையெழுத்தான புரிந்துணர்வு
ஒப்பந்தம் நேர்மறையான தொடக்கத்தைப்
பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் பல்லுயிர் பாதுகாப்பு
முயற்சிகளுக்கு சிங்கப்பூரும் பங்களிக்க
ஆர்வமாக உள்ளது. இந்த ஆண்டு ஜூன்
மாதம் தாவரங்கள் மற்றும் வனவிலங்கு
பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில்
என்பார்க்ஸ் மற்றும் பகாங் பல்லுயிர்
மன்றத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தானது என்று மேனன்
குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற சிங்கப்பூரின் 58வது தேசிய தின விழா விருந்து நிகழ்வில்
உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை
அமைச்சர் அந்தோணி லோக், தொடர்பு
மற்றும் டிஜிட்டல் துறை துணை அமைச்சர்
தியோ நீ சிங் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.
ஜொகூர்-சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில்
குடிநுழைவு நடைமுறைகளை
விரைவுபடுத்துவது உட்பட இரு நாட்டு
மக்களிடையிலான பயண வசதிகளை
மேம்படுத்துவதற்கு சிங்கப்பூர் மற்றும்
மலேசிய துறைகள் இணைந்து செயல்பட்டு
வருவதாக மேனன் கூறினார்.
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு
போக்குவரத்து அமைப்பு (ஆர்.டி.எஸ் )
இணைப்பிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரும் 2026ஆம் ஆண்டு
பூர்த்தியாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பெர்சாமா (ஒன்றாக) என்ற
கருப்பொருளைக் கொண்ட சிங்கப்பூரின்
58வது தேசிய நிகழ்வு சிங்கப்பூருக்கும்
மலேசியாவுக்கும் இடையே உள்ள வலுவான
உறவுகளை அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது. எதிர்கால சவால்களை
எதிர்கொள்ள இரு நாடுகளும் இணைந்து
செயல்படும் என்பதை இது காட்டுகிறது என
அவர் குறிப்பிட்டார்.








