செர்டாங், ஆக 17- அதிநவீன வேளாண் தொழில்நுட்பங்களின் வாயிலாக
விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், நெல் விவசாயிகளின் திறனை
மேம்படுத்தும் பரிந்துரைகளை உள்ளடக்கிய உணவு பாதுகாப்பு தீர்மானம்
விவசாய மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சிடம்
சமர்பிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டிற்கான தேசிய உணவு பாதுகாப்பு மாநாட்டில்
நிபுணர்களுக்கும் துறை சார்ந்த பங்களிப்பாளர்களுக்கும் இடையே
நடைபெற்ற கலந்துரையாடலின் வாயிலாக உருவாக்கப்பட்ட இந்த
தீர்மானத்தை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபுவிடம் மலேசிய புத்ரா
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ முகமது
ரோஸ்லான் சுலைமான் வழங்கினார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுக்கு பின்னர் நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், வேளாண் மற்றும் உணவு
பாதுகாப்பு கொள்கைக்கான இலக்கை வகுப்பதில் அமைச்சுக்குச் சரியான
தளமாக இந்த தீர்மானம் விளங்கும் என்று சொன்னார்.
இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்களும் பிரச்சனைகளும்
எழுப்பப்பட்டன. அவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் இதில்
முன்வைக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.
வருமானம் தாமதமாக கிடைப்பது, அப்படியே கிடைத்தாலும் அதிகமாக
இல்லாதது காரணங்களால் இளம் தலைமுறையினர் விவசாயத்
துறையில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. ஆயினும், தற்போதுள்ள
நவின விவசாய முறை அத்தரப்பினரை அதிகம் ஈடுபடச் செய்கிறது என்று
அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் 340 பேராளர்கள் பங்கு கொண்ட வேளையில்
மாநாட்டையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் வேளாண் தொழில் துறை மற்றும் அரசாங்கத் துறைகளை சேர்ந்த 36 கண்காட்சியாளர்களும் பங்கு கொண்டனர்.








