பெட்டாலிங் ஜெயா, ஆக 16- கவனக் குறைவு காரணமாக இந்தியப்
பிரஜைக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக டத்தோ அந்தஸ்து கொண்ட
வர்த்தகர் மற்றும் அவரின் இரு மகன்கள் மீது இங்குள்ள செஷன்ஸ்
நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
தங்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வி. நந்தகுமார் (வயது 51),
மிரன் ராஜ் (வயது 24) மற்றும் கிரித்திக் ராஜ் (வயது 22) ஆகிய மூவரும்
மறுத்து விசாரணை கோரினர்.
தலைமறைவாக இருந்து வரும் மற்றொரு நபருடன் சேர்ந்து நிதி
குமாஸ்தவான ஏ. விநாயகமூர்த்தி (வயது 41) என்பவருக்கு மரணம்
ஏற்படும் அளவுக்கு காயங்களை உண்டாக்கியதாக அவர்கள் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளனர்.
ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் ஸ்ரீ செர்டாங்கில் உள்ள பழைய உலோகப்
பொருள் விற்பனை மையத்தில் இம்மாதம் 4ஆம் தேதி பிற்பகல் 1.30
மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிரான
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தண்டனைச் சட்டத்தின் 34வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட அதே
சட்டத்தின் 304(ஏ) பிரிவின் கீழ் அம்மூவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 30
ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
விதிக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்கக்கூடாது என்று
அரசுத் தரப்பு வழக்கறிஞர் அகமது ஜூஹாய்னி முகமது அமின்
நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட
அனைவருக்கும் உடல் நலப் பிரச்சனை உள்ளதோடு தங்கள்
குடும்பத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கும்படி எதிர்த்தரப்பு வழக்கறிஞர் டத்தோ சுராஜ் சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
அந்த மூவரையும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 10,000 வெள்ளி
ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி ஃபாய்ஸ் ட்ஜியாவுடின்,
அவர்கள் தங்களின் அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க
வேண்டும் என்பதோடு மாதம் ஒரு முறை அருகிலுள்ள போலீஸ்
நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மறுவிசாரணை வரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.








