கோத்தா பாரு, ஆக 16- மக்களின் நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தின்
அடிப்படையில் மத்திய அரசுடனான உறவை வலுப்படுத்தும் முதிர்ச்சியான
அணுகுமுறையை கடைபிடிக்க கிளந்தான் அரசு விரும்புவதாகப் புதிதாக
நியமிக்கப்பட்டுள்ள அம்மாநில மந்திரி புசார் டத்தோ முகமது நசாருடின்
கூறினார்.
அனைத்துத் தரப்பினரின் குறிப்பாக மக்களின் நலனைக் காப்பதில் மாநில
அரசு மற்றும் மத்திய அரசுகளுக்கிடையிலான அணுக்கமான ஒத்துழைப்பு
மிகவும் முக்கியமானதாகும் என்று அவர் சொன்னார்.
அதோடு மட்டுமின்றி, இந்த ஒத்துழைப்பின் மூலம் இஸ்லாத்தின்
மேன்மை தொடர்ந்து வலுப்படுத்த முடியும். அரசு நிர்வாகத்தின்
சுபிட்சத்திற்கும் மாநில மக்களின் நலனுக்கும் இஸ்லாம் அடித்தளமாக
விளங்குவதை இக்கொள்கை நிரூபித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இன மற்றும் பின்னணி வேறுபாடின்றி அனைத்து கிளந்தான் மக்களுக்கும்
மந்திரி புசாராக விளங்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்
எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிளந்தான் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டப் பின்னர் நடத்திய தனது
முதல் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இச்செய்தியாளர் கூட்டத்தில் துணை மந்திரி புசார் டத்தோ டாக்டர்
முகமது பாட்சில் ஹசானும் கலந்து கொண்டார்.








