கோலாலம்பூர், ஆக 16- நாட்டில் மிகவும் வறிய நிலையிலுள்ள
ஏழைகளுக்கு உதவும் வகையில் அமானா சஹாம் ரஹ்மா எனும்
அறங்காப்பு நிதித் திட்டத்தை உருவாக்குவது குறித்து உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு பரிசீலித்து வருகிறது.
வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ள
சுமையைக் குறைப்பதிலும் அத்தரப்பினர் நீண்ட கால அடிப்படையில்
வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்வதிலும் இந்த திட்டம் துணை
புரியும் என்று அதன் துணையமைச்சர் பவுஸியா சாலே கூறினார்.
இந்த அறங்காப்புத் திட்டத்தின் கீழ் கணிசமானத் தொகையை குறிப்பிட்ட
சில நிறுவனங்களில் அரசாங்கம் முதலீடு செய்யும். அந்த நிறுவனங்கள்
மூலம் கிடைக்கும் லாப ஈவுத் தொகை உதவித் தேவைப்படும்
குடும்பங்களுக்கு வழங்கப்படும். அதே சமயம் அசல் மூலதனத் தொகை
அரசாங்கத்தின் சொத்தாக தொடர்ந்து அந்நிறுவனங்களில் இருந்து வரும்
என்றார் அவர்.
இந்த அமானா சஹாம் ரஹ்மா திட்டத்தை அமல்படுத்துவதற்கான
சரியான வழிமுறையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நிதிக் கணக்கில்
முதலீடு செய்வதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிதியை சேமநிதியில்
வைக்கலாம் என அவர் தெரிவித்தார்.
உதாரணத்திற்குப், பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டில் அரசாங்கம்
ஒரு லட்சம் வெள்ளியை முதலீடு செய்யும். அந்த தொகை
அரசாங்கத்திற்கு சொந்தமாக இருக்கும். அதே சமயம் அதன் மூலம்
கிடைக்கும் லாப ஈவுத் தொகை வறிய நிலையில் உள்ளவர்களுக்கு
பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.








