ஜோர்ஜ் டவுன், ஆக 15- பினாங்கு மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு
ஏதுவாக துணை முதல்வர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களை
நியமனம் செய்வது தொடர்பில் மாநில பக்கத்தான் ஹராப்பான் மற்றும்
பாரிசான் நேஷனல் தலைவர்கள் நேற்று இங்கு சந்திப்பு நடத்தினர்.
இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் நிலையிலான இந்த சந்திப்பு
நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றதாகக் கூறிய பினாங்கு மாநில
பி.கே.ஆர். துணைத் தலைவர் டத்தோ முகமது பக்தியார் வான் சிக்,
இக்கூட்டத்தில் இறுதி செய்யப்படும் உறுப்பினர்களின் பட்டியல் அடுத்தக்
கட்ட நடவடிக்கைகாக கட்சியின் மேல்மட்டத்திற்கு அனுப்பப்படும் என்றார்.
மத்திய நிலையிலான கூட்டம் நேற்றிரவு நடைபெற்ற வேளையில் அதன்
தொடர்பான முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அம்னோ சார்பில் தாங்களும் பெயர்ப் பட்டியலை
அனுப்பியுள்ளதாகக் கூறிய, மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவர்
டத்தோ மூசா ஷேக் பாட்ஸிர், உயர்மட்ட தலைமைத்துவம் எடுக்கும்
முடிவுக்கு கட்டுப்பட தாங்கள் தயாராக உள்ளதாகச் சொன்னார்.
இந்த தேர்தலில் அம்னோ இரு தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.
அந்த இரு பிரதிநிதிகளில் யாராவது ஒருவருக்கு ஆட்சிக்குழுவில் இடம்
வழங்கினால் நாங்கள் அதனை வரவேற்போம் என்று அவர் தெரிவித்தார்.
நாற்பது தொகுதிகள் கொண்ட பினாங்கு மாநிலத்தில் 29 இடங்களை
வென்றதன் மூலம் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை
ஹராப்பான்- பாரிசான் கூட்டணி பெற்றது.
இம்மாநிலத்தில் ஜசெக 19 இடங்களையும் பிகேஆர் 7 இடங்களையும்
அம்னோ இரு இடங்களையும் பெரிக்கத்தான் நேஷனல் 11 இடங்களையும்
வென்றன.








