ஷா ஆலம், ஆக 11- இங்குள்ள செக்ஷன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள உணவகங்களில் தூய்மைப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவு அண்மையில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.
உணவகங்களில் தூய்மையைக் கடைபிடிக்கப்படுதையும் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதையும் உறுதி செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட இச்சோதனையில் 10 அமலாக்க அதிகாரிகள் பங்கு கொண்டதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.
மாநகர் மன்றம் இத்தகைய சோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், இம்முறை இங்குள்ள பிளாசா ஸ்ரீ மூடாவில் செயல்படும் உணவகங்களை மையமாக கொண்டு இச்சோதனை நடத்தப்பட்டது என்று சொன்னார்.
இந்த நடவடிக்கையின் போது வர்த்தக லைசென்ஸ், உணவகங்களின் தூய்மை ஆகியவற்றோடு உணவகப் பணியாளர்களுக்கு டைபாய்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதோடு, முகக் கவசம், தொப்பி மற்றும் ஏப்ரன் அணியாத மற்றும் சமையல் எண்ணெய் கசடுகள் கால்வாயில் கலக்காமலிருப்பதற்கு முறையான தடுப்புகளை அமைக்காத உணவகங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த அமலாக்க நடவடிக்கையின் போது ஒன்பது உணவகங்கள் மீது சோதனை நடத்தப்பட்டன. அவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்காத எட்டு உணவங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.








