கோம்பாக், ஆக 11- இன மற்றும் மதத் துவேஷங்களைத் தூண்டும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்குக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இத்தகையச் செயல்கள் இறுதியில் நாட்டின்
நல்லிணக்கத்தைச் சிதைத்து விடும் என்று நினைவுறுத்தினார். நேற்றிரவு இங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உணர்ச்சிமிக்க உரையை ஆற்றிய அன்வார், மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன் தாம் ஆட்சியாளர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளதாகக் கூறினார்.
பிரிவினைப் போக்கை கடைபிடிக்கும் தரப்பினர் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கான மேலும் ஆக்ககரமான வழிவகைகளை ஆராய்வதற்காக இச்சந்திப்பை தாம் நடத்தவுள்ளதாக அவர் சொன்னார். நான் மாமன்னருடனும் சிலாங்கூர் சுல்தானுடனும் சந்திப்பு நடத்தியுள்ளேன். அது அரசியல் தொடர்பான சந்திப்பு அல்ல.
நீங்கள் யாரை அல்லது எந்த கட்சியை ஆதரிக்கிறீர்கள் என்று எனக்கு கவலையில்லை. நீங்கள் சமயத்தின் மீது சவாரி செய்தால், கடவுளின் சட்டத்துடன் விளையாடினால், மக்களை நிந்தனை செய்தால், அவர்களை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று
முத்திரைக் குத்தினால்…. உங்களுக்கு இன்றிரவு ஒன்றை ஞாகப்படுத்த விரும்புகிறேன்.
தேர்தலுக்குப் பின்னர் நான் இதுபோன்ற செயல்களை சகித்துக் கொள்ள மாட்டேன். நாடு காப்பாற்றப் பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். அனைத்து பிரஜைகளுக்கும் இங்கு மரியாதை வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாம் மீதான புரிந்துணர்வை மேம்படுத்த வேண்டும். மலாய் மொழியை வலுப்ப்படுத்துவதோடு பூமிபுத்ராக்கள் மற்றும் அரச அமைப்பின் அந்தஸ்தை பாதுகாக்க வேண்டும்.
ஆனால், இது பூஜியத் தொகை விளையாட்டு அல்ல. நான் சீனர்களை ஆதரித்தால் மலாய்க்காரர்களை ஆதரிக்கவில்லை என அர்த்தமல்ல என்று நேற்றிரவு இங்கு சுமார் 4,000 பேர் கூடியிருந்த பக்கத்தான் ஹராப்பான்- பாரிசான் நேஷனல் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அன்வார் சென்னார்.








