கோலாலம்பூர், ஆக 11 - ஆறு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இந்த சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டவுடன் சில கட்சிகளின் மையப் புள்ளிகளாக இருக்கும் எனக்
கருதப்படும் மாநில அரண்மனைகள் உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரச மலேசிய போலீஸ் படை (பி.டி.ஆர்.எம்.)
கடுமையாக்குகிறது. .
தேர்தலுக்குப் பிந்தைய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதி செய்வதற்கான நடவடிக்கை இதுவாகும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐ.ஜி.பி.) டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசேன் கூறினார்.
மேலும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குறிப்பாக நள்ளிரவில் எந்த இடையூறுகளும் ஏற்படுவதை காவல்துறை விரும்பாததால் மாநில அரண்மனைகளில் பாதுகாப்புக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பதவி பிரமாணம் செய்வதற்கு யாரேனும் அரண்மனை உள்ள சுல்தானை நள்ளிரவில் தொந்தரவு செய்வதை நாங்கள் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி மாநில அரசாங்கத்தில் ஆட்சி மாற்றம்
அமைதியான முறையில் நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர்
நேற்று புக்கிட் அமானில் நடைபெற்ற சிறப்பு ஊடக மாநாட்டில் கூறினார்.
ஆறு மாநிலங்களில் உள்ள மாநில சட்ட மன்றங்கள் கலைக்கப்பட்டவுடன்
வேட்புமனு தாக்கல் நாள், முன்கூட்டியே வாக்களிப்பது மற்றும் பிரச்சார காலம் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பணிகளை
காவல்துறை ஏற்கனவே தயார் செய்துள்ளதாக ரஸாருடீன் கூறினார்.
மததிய சேமப்படை, பொது நடவடிக்கைப் பிரிவு, விமானப் பிரிவு உட்பட மாநிலத்
தேர்தல்களுக்காக பல்வேறு பணிகளுக்காக 36,492 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
காலியான காவல் நிலைய லாக்கப்களில் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அச்சமின்றி வாக்களிக்க வருமாறு அவர் உத்தரவாதம் அளித்தார்.
தேர்தல் முழுவதும் காவல் துறையினர் பணியில் இருப்பது எனக்குத் தெரியும்.
தடுக்கப்படுவோம் அல்லது நிறுத்தப்படுவோம் என்ற அச்சமின்றி அவர்கள் வாக்களிக்க வெளியே வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் அவர்.
நான், துணை ஐ.ஜ.பி. டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சையும் தேர்தல் நடைபெறும் ஆறு மாநிலங்களில் உள்ள மாநில மற்றும் மாவட்டக் காவல்துறைத் தலைவர்களுடன்
இணைந்து தயார் நிலையில் உள்ளோம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக
வாக்களிக்கலாம் என்று அவர் கூறினார்.








