பாசீர் மாஸ், ஆக 8- இஸ்லாத்தைக் காப்பது என்ற அடிப்படைக்
கோட்பாட்டில் உருவாக்கப்பட்டது. பாஸ் கட்சி அந்த நோக்கத்திலிருந்து
விலகி விட்டதால் அது இனியும் உண்மையான கட்சியாக
விளங்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தற்போது பாஸ் கட்சி பெர்சத்து கட்சியுடன் மட்டுமின்றி ஹூடுட் சட்ட
அரசியலமைப்பு தன்மைக்கு எதிராக கேள்வியெழுப்பிய கெராக்கான்
கட்சியுடனும் அது கைக்கோர்க்கத் தொடங்கி விட்டது என்று அவர்
சொன்னார்.
தற்போது கெராக்கான் கட்சி பாஸ் கட்சியுடன் நட்புறவாக இருக்கிறது.
இதற்கு முன்னர் ஹூடுட் சட்ட அரசியலமைப்பு குறித்து அந்த கட்சி
கேள்வியெழுப்பியது என்று செத்தோக் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்
பிரசாரக் கூட்டத்தின் போது அவர் தெரிவித்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் கட்சி பினாங்கில் மலாய்க்காரர்கள் தொகுதிகள்
உள்பட 20 இடங்களில் கெராக்கான் சார்பில் வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இஸ்லாத்தின் மேம்பாட்டிற்காக பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை ஒற்றுமை
அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வந்த போதிலும் பக்கத்தான் ஹராப்பான்
மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி இஸ்லாத்திற்கு துரோகம்
இழைப்பதாக பாஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது என்றும் அவர்
சொன்னார்.
எதிர்வரும் 12ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் விவேகமுடன்
வாக்களிக்கும்படி கிளந்தான் மாநில மக்களை அன்வார் கேட்டுக் கொண்டார்.
செத்தோக் தொகுதியில் நடைபெற்ற இந்த தேர்தல் பேரணியில்
மழையையும் பொருட்படுத்தாமல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.








