புத்ராஜெயா, ஆகஸ்ட் 8: ஜூலை 16 முதல் ஜூலை 22 வரையிலான தொற்றுநோயியல் வாரம் (ME) 29 இல் மொத்தம் 2,258 டிங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
முந்தைய வாரத்தில் 2,421 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 6.7 சதவீதம் குறைவு என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
இதுவரை, இந்த ஆண்டு மொத்தம் 66,224 டிங்கி சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 29,603 சம்பவங்கள் பதிவாகியுள்ளன அதாவது இவ்வாண்டு 123.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
"டிங்கி காய்ச்சலால் இதுவரை மொத்தம் 47 இறப்புகள் பதிவாகியுள்ளன," என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹாட்ஸ்பாட் வட்டாரங்கள் முந்தைய வாரத்தில் 100 இடங்களாக இருந்தன, ஆனால், இந்த வாரம் அவை 104 இடங்களாக அதிகரித்துள்ளன. அதாவது சிலாங்கூர் (70), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் (16), கெடா (5), பினாங்கு, பெர்லிஸ் மற்றும் சபாவில் தலா மூன்று மற்றும் பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூரில் தலா ஒன்று ஆகும்..
– பெர்னாமா








