அலோர் ஸ்டார், ஆக 8- எதிர்வரும் 12ஆம் தேதி ஆறு மாநிலங்களில்
நடைபெறவிருக்கும் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசை மாற்றுவதற்கு
வழி வகுக்கும் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கும் எந்த ஷரத்தும்
அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை.
இந்த விவகாரம் விஸ்வரூமெடுத்துள்ளது குறித்து தாம் பெரிதும்
வியப்படைவதாகக் கூறிய பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும்
அமைப்பு சீர்திருத்தம்) டத்தோ அசாலினா ஓத்மான் சைட், இந்த வாதத்தை
முன்வைக்கும் தரப்பினர் அதற்கான சட்ட ஆதாரங்களையும் காட்ட
வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பலர் இவ்வாறு கூறுவதை நானும் கேட்டுள்ளேன். சட்டமன்றத் தேர்தல்
முடிவுகள் மத்திய அரசை மாற்றும் என்ற வாதம் உண்மையில் வியப்பை
அளிக்கிறது என்றார் அவர்.
நான் அரசியலமைப்புச் சட்டத்தை பல முறை படித்து விட்டேன்.
இவ்வாறான எந்த ஷரத்தும் என் கண்ணில் படவில்லை. ஒரு வேளை
அவர்கள் வேறு மாதிரியான சட்டத்தைப் படித்திருப்பார்கள் போலிருக்கிறது
என்று அவர் கூறினார்.
நேற்று இங்குள்ள கெடா மாநில திவால் இலாகா அலுவலகத்திற்கு
வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.
ஆறு மாநிலங்களில் பெரிக்கத்தான் நேஷனலுக்கு கிடைக்கும் வெற்றி
மத்திய அரசை மாற்றுவதற்கு வழி வகுக்கும் என்று பாஸ் கட்சித்
தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறியதாக ஊடகங்கள்
நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதற்கும் ஒரு கட்சியின் சார்பாக
வென்ற இடத்தை மற்றொரு கட்சிக்கு மாற்றுவதற்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்டம் முற்றாகத் தடுக்கிறது என்றும் அசாலினா குறிப்பிட்டார்.








