தாவாவ், ஆக 8- சுமார் பதினோரு லட்சம் வெள்ளி மதிப்புள்ள பராமரிப்பு
குத்தகைகளைப் பெறுவதற்கு போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது
தொடர்பில் நிறுவன உரிமையாளர்கள் இருவரை சபா மாநில ஊழல்
தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று பிற்பகல் 2.00 மணியளவில்
தாவாவில் உள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்த போது 40 வயது
மதிக்கத்தக்க அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக வட்டாரம் ஒன்று
கூறியது.
2020 பொருளாதார மீட்சித் திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகளை
மேற்கொள்வதற்காக அவ்விருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டில் போலி
ஆவணங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அவ்விரு நிறுவன உரிமையாளர்களும் கைது
செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய சபா மாநில எம்.ஏ.சி.சி. இயக்குநர்
டத்தோ எஸ். கருணாநிதி, அவர்கள் பின்னர் எம்.ஏ.சி.சி. ஜாமீனில்
விடுவிக்கப்பட்டதாகக் கூறினார்.
அவர்கள் இருவரும் தண்டனைச் சட்டத்தின் 471வது பிரிவின் கீழ் நாளை
தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்றும் அவர்
சொன்னார்.








