பெட்டாலிங் ஜெயா, ஆக 7- நாட்டில் மிக வரிய நிலையை அகற்றவதற்கு
ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டாலும்
அதனைச் செலவிட தாங்கள் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.
இந்த இலக்கு அடையப்படுவதை உறுதி செய்வதற்கு அனைத்து
அமைச்சர்களும் அரசுத் துறைகளும் கடுமையாக உழைப்பர் என்று அவர்
தெரிவித்தார்.
ஏழைகளைப் புறக்கணித்து விட்டு பிரதமர் என்ற முறையில் நான்
நிம்மதியாக உறங்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு போதும்
முடியாது. நண்பர்களே, இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 10 கோடி
வெள்ளி போதாது என்றால் 20 கோடி வெள்ளியை நாம் செலவு
செய்வோம். எனக்கு கவலையில்லை. அதற்கு தேவையானப் பணத்தை
நாம் தேடுவோம் என்று அவர் உறுதிப்படக் கூறினார்.
இங்குள்ள யுகே பெர்டானாவில் நேற்றிவு நடைபெற்ற மெகா பெர்டானா
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தாமான் பெர்மாத்தாவில் நடைபெற்ற உலு கிளாங் மடாணி
ஒற்றுமை பிரசாரப் பயணத்தில் உரையற்றிய அன்வார், அரசாங்கத்தின்
முயற்சிகளை குறைகூறும் மற்றும் சிறுமைப்படுத்தும் எதிர்க்கட்சிகளின்
நடவடிக்கையினால் அது ஒரு போதும் சோர்ந்து விடாது என்பதோடு
மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளையும்
அது ஒருபோதும் நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
நீங்கள் என்னை என்ன பெயரிட்டாவது அழைத்துக் கொள்ளுங்கள்.
என்னை ஏளனப்படுத்தினாலோ என்னை முட்டாள் என்று அழைத்தாலோ எனக்கு பாதமில்லை. மக்களுக்கும் நாட்டிற்கு தொடர்ந்து நல்லவற்றைச்
செய்து கொண்டிருப்பேன். நிச்சயமாக நம்மால் செய்ய முடியும் என்றார்
அவர்.
இதனால்தான் நான் பிருமாண்ட நினைவுச் சின்னங்களை மட்டும்
நிர்மாணிப்பதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை. மலேசியா பிருமாண்ட
நினைவுச் சின்னங்களுக்குப் பேர் போனது. என்னைப் பொறுத்த வரை
மக்கள் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறேன். பரம ஏழ்மை நிலையை
அகற்ற விரும்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.








