நீலாய், ஆக 7- அரச மலேசிய சுங்கத் துறை இங்குள்ள கோலாலம்பூர்
அனைத்துலக விமான நிலையத்தின் வான் சரக்கு போக்குவரத்து
தொகுதியில் இம்மாதம் 1ஆம் தேதி மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையில் 1 கோடியே 76 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 88 கிலோ
கொக்கேய்ன் பறிமுதல் செய்யப்பட்டது.
இரவு மணி 8.00 அளவில் மேற்கொள்ளப்பட்ட அந்நடவடிக்கையில் 995
போத்தல்களில் அடைக்கப்பட்ட மாத்திரை வடிவிலான கொக்கோய்
போதைப் பொருள் நான்கு அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதை
சுங்கத் துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கண்டு பிடித்ததாக
சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஜசாலி ஜோஹான்
கூறினார்.
அந்த அட்டைப் பெட்டிகளில் கார் உபரி பாகங்கள் அதாவது பிரேக்
தட்டுகள் வைக்கப்பட்டிருப்பதும் இச்சோதனையில் தெரிய வந்தது என்று
அவர் தெரிவித்தார்.
அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கில் அந்த பெட்டியில் ஊட்டச் சத்து
மாத்திரைகள் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்,
தீவிர சோதனை மேற்கொண்ட போது அதில் கார் உபரிபாகங்களோடு
மாத்திரை வடிவில் போதைப் பொருள் பதுக்கப்பட்டிருந்தது என்றார் அவர்.
போதைப் பொருள் கடத்தல் கும்பல் இத்தகைய பாணியைக் கடைபிடிப்பது
இதுவே முதன் முறையாகும் எனக் கூறிய அவர், சரக்கு அனுப்பும்
பாரத்தில் போலி நிறுவனத்தின் பெயர் பெறுநராக குறிப்பிடப்பட்டிருந்தது
என அவர் தெரிவித்தார்.
ஹாலந்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த போதைப் பொருள் வந்தடையும்
இறுதி இடமாக கே.எல்.ஐ.ஏ. காம்ப்ளெக்ஸ் கார்கோ என
குறிப்பிட்ப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் உள்நாட்டுச் சந்தைக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம் என அவர் மேலும்
சொன்னார்.
இறக்குமதியாளர் குறித்த விபரங்கள் யாவும் போலியானவை என்பதால்
அந்த போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கைது
செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.








