பெட்டாலிங் ஜெயா, ஆக 7- ஆறு மாநிலத் தேர்தல்களுக்கான இரண்டாம்
சுற்றுப் பிரசாரம் தொடங்கியுள்ள நிலையில் எதிர்த் தரப்பினரை
நிந்திக்காமல் விவேகத்துடன் பிரசாரம் செய்யும்படி போட்டியிடும்
அனைத்துக் கட்சிகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கேட்டுக் கொண்டுள்ளார்.
நடப்பு நிலவரங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் களமாக தேர்தல்
பிரசாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹராப்பான்
தலைவருமான அவர் சொன்னார்.
அரசியலில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். ஆனால், சத்தியம் செய்யத்
தேவையில்லை. சில அரசியல் பிரசாரக் கூட்டங்களில் “அன்வார் துரோகி“,
“அன்வார் முட்டாள்“ போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதை
கேட்டேன். எனது ஆலோசனை என்னவென்றால் மிகுந்த ஆணவத்தோடு
இருக்காதீர்கள்.
எதிர்க்கட்சிகள் என்னை விமர்சிக்க விரும்பினால் பாதகமில்லை. நான்
செய்தவை எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது. அதனை
விமர்சிக்கலாம் கருத்துகளையும் வெளியிடலாம். ஆனால் நிந்தனை
செய்யாதீர்கள். யாரையும் சபிக்கவோ நிந்திக்கவோ வேண்டாம். காரணம்
இறுதியில் நாம் அனைவரும் நண்பர்களாகவும் ஒரே குடும்பமாகவும்
இருக்கப் போகிறோம் என்றார் அவர்.
நேற்றிரவு இங்குள்ள டத்தாரான் அனாக் மூடாவில் நடைபெற்ற பிரசாரக்
கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தாமும் ஒற்றுமை அரசாங்கமும் ஆணவமும் கொடுங்கோன்மையும்
நிறைந்தவர்கள் எனக் கூறப்படுவதையும் அன்வார் நிராகரித்தார். மக்கள்
நலன் காக்கும் மற்றும் ஊழலை ஒழிக்கும் தலைவர்களாக எப்போதும் இருக்க பிரதமர் என்ற முறையில் தாமும் இதர அமைச்சர்களும் விரும்புவதாக அவர் சொன்னார்.
ஊழலுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டோம் என்ற காரணத்தினால்
எங்களை கொடுங்கோலர்கள் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், அது எனது முடிவல்லை நானும் சிறைக்கு சென்றவண்ணம்
இருந்துள்ளேன். ஏறக்குறைய 11 ஆண்டுகளை நான் சிறையில்
கழித்துள்ளேன் என்றார் அவர்.








