கோலாலம்பூர், ஆக 7- எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி இணையச்
சேவைக் கட்டணத்தைக் குறைக்கும்படி அனைத்து அகண்ட அலைவரிசை
இணைய சேவை வழங்குநர்களும் பணிக்கப்பட்டுள்ளனர்.
அடைவு நிலைக்கான கட்டாய தரநிலையின் (எம்.எஸ்.ஏ.பி.) அமலாக்கம்
காரணமாக இணையச் சேவைக்கான மொத்த விலை குறைக்கப்பட்டு
தற்போது மலிவாகியுள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
மக்கள் சிறப்பான இணையச் சேவையைப் பயன்படுத்துவதை உறுதி
செய்வதற்காக குறைந்த விலையிலானஃபிரி பெய்ட் எனப்படும்
முன்கட்டண இணையச் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை
அமல்படுத்தியுள்ளது. முன்பு 10.00 வெள்ளியாக இருந்த இக்கட்டணம்
தற்போது 5.00 வெள்ளியாக குறைக்கப்பட்டு விட்டது. மேலும் அகண்ட
அலைவரிசை இணையக் கட்டணமும் குறைக்கப்பட்டு விட்டது என்றார்
அவர்.
இங்குள்ள யுகே பெர்டானாவில் நேற்றிரவு நடைபெற்ற புக்கிட் அந்தாரா
பங்சா தொகுதி நிலையிலான மெகா பெர்டானா தேர்தல் பிரசாரத்தில்
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, 3ஆர் எனப்படும் இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள்
பற்றிய விவகாரங்களைத் தேர்தல் பிரசாரங்களின் போது எழுப்பக் கூடாது
என்று அரசாங்கம் பல முறை எச்சரித்த போதும் ஒரு சிலர் தொடர்ந்து
இவ்விவகாரங்களை எழுப்பி வருவதாக அவர் சொன்னார்.
தொடர்பு அமைச்சர் என்ற முறையில் இந்த எச்சரிக்கையை விடுக்க
வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. எனினும், சில தரப்பினர் இந்த
எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இருக்கின்றனர் என்றார் அவர்.
தேர்தல் பிரசாரங்களின் போது உணர்ச்சிகரமான 3ஆர் விவகாரங்களை
யாரேனும் தொடர்ந்து எழுப்பி வந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
தைரியமாகச் செய்தால் அதன் விளைவுகளையும் தைரியமாக
எதிர்கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களுக்கு வழங்கும் நினைவுறுத்தல்.
போலீசார் உங்களைப் பிடிக்க வந்தால் எங்கள் மீது கோபப்படாதீர்கள்
என்று அவர் கூறினார்.








