கோலாலம்பூர், ஆக 6- பாத்தேக் ஏர் விமான நிறுவனம் வரும் அக்டோபர்
மாதம் தொடங்கி கோலாலம்பூர்-இஸ்தான்புல் தடத்தில் பயணச்
சேவையை மேற்கொள்ளும்.
இஸ்தான்புல் சபிஹா கோக்கென் அனைத்துலக விமான நிலையத்தில்
மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் 110 கோடி வெள்ளியை முதலீடு
செய்யும் என்று துருக்கிய அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகனுடன் நேற்றிரவு
இயங்கலை வாயிலாக நடத்திய சந்திப்புக்குப் பின்னர் தனது பேஸ்புக்
பதிவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ரி
காடீரும் பிரதமருடன் உடனிருந்தார்.
துருக்கியுடனான மலேசியாவின் வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு
அடிப்படையில் கட்ந்தாண்டு 12.6 விழுக்காடு அதிகரித்து 462 கோடி
அமெரிக்க டாலராக (2,100 கோடி வெள்ளி) உயர்ந்தது.
இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக வெகு
விரைவில் தாம் மலேசியாவுக்கு வரவிருக்கும் தகவலையும் இச்சந்திப்பின்
போது எர்டோகன் வெளியிட்டதாக அன்வார் சொன்னார்.
அடுத்த மாதம் அமெரிக்காவின் நியுயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐ.நா.
மாநாட்டில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் இணக்கம்
தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








