கோம்பாக், ஆக 6- சிலாங்கூர் மாநிலம் பெற்று வரும் வருடாந்திர
வருமானமான 180 கோடி வெள்ளியைக் காட்டிலும் அதிகமாக அதாவது 200
கோடி வெள்ளியை திரங்கானு பெற்ற போலும் அது நாட்டின் ஏழ்மையான
மாநிலங்களில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது என்று சிலாங்கூர்
பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பெரிக்கத்தான் நேஷனல் தலைமைத்துவத்தின் கீழ் இருந்து வரும்
அம்மாநிலத்தின் தவறான நிர்வாகம் மற்றும் தெளிவான பொருளாதார
இலக்கு இல்லாமையே இதற்கு காரணமாகும் என அவர் சொன்னார்.
திரங்கானு ஆண்டு வருமானமாக 200 கோடி வெள்ளி வரை பெற்று
வருகிறது. இது தவிர, அம்மாநிலம் குறைவில்லா இயற்கை வளங்களைக்
கொண்டுள்ளதோடு எண்ணெய்க்கான ராயல்டி தொகையையும் பெற்று
வருகிறது.
இதற்கு மாறாக, சிலாங்கூருக்கு ஆர்.இ.இ. (அரிய மண் கனிமம்) அல்லது
எண்ணெய்க்கான உரிமத் தொகை எதுவும் கிடையாது என்பதோடு
ஆண்டுக்கு 180 கோடி வெள்ளியை மட்டும் வருமானமாகப் பெறுகிறது.
வருமானத்தில் 20 கோடி வெள்ளி வேறுபாடு இருந்த போதிலும் நாட்டின்
பொருளாதாரத்திற்கு நாமே அதிகப் பங்களிப்பை வழங்குகிறோம் என அவர்
சொன்னார்.
எதனால் இப்படி நடக்கிறது? முறையான நிர்வாகம் மீது கவனம்
செலுத்தப்படாததே இதற்கு காரணம். ஆகவே நான் சிலாங்கூர்
வாக்காளர்களைக் கேட்கிறேன். நமது மாநிலமும் கெடா அல்லது
திரங்கானு போல் ஆக வேண்டுமா? என அவர் கேள்வியெழுப்பினார்.
நேற்றிவு சுங்கை துவா தொகுதியின் கம்போங் சுங்கை கெர்த்தாசில்
நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு
கடந்தாண்டு 25.5 விழுக்காடாக இருந்ததை மலேசிய புள்ளிவிபரத்
துறையின் தரவுகள் காட்டுகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
சிலாங்கூரின் பங்களிப்பு 24.8 விழுக்காடாக இருந்தது.








