கோலாலம்பூர், ஆக 6- சிலாங்கூர் மந்திரி புசாராக டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று 76 விழுக்காட்டு பல்லின
மக்களும் 69 விழுக்காட்டு மலாய்க்கார்களும் விரும்புவதை ஆய்வின்
முடிவுகள் காட்டுகின்றன.
அதே சமயம் மந்திரி புசார் பதவியை வேறு ஒருவர் நிரப்ப வேண்டும்
என்று பல்லினங்களைச் சேர்ந்த 22 விழுக்காட்டினரும் 29 விழுக்காட்டு
மலாய்க்காரர்களும் விரும்புவதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிலாங்கூரில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட 34 தொகுதிகளில்
கடந்த ஜூலை மாதம் 22 முதல் 28ஆம் தேதி வரை எண்டெவர்-
எம்.ஜி.சி.(இ.எம்.ஜி.சி.) ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது
தெரிய வந்துள்ளது.
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த அமிருடின் இரு
தரப்பையும் சேர்ந்த வாக்காளர்களின் தேர்வுக்குரியத் தலைவராகத்
தொடர்ந்து விளங்குகிறார். அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் கைரி
ஜமாலுடின் 13 விழுக்காட்டு அனைத்து இனத்தினரின் ஆதரவையும் 16
விழுக்காட்டு மலாய்க்கார்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.
மூன்றாவது இடத்தில் முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசாரான பெர்சத்து
கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி ( 8 மற்றும் 10
விழுக்காட்டு ஆதரவு) உள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில்
சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர்
யூனுஸ் ஹைரி (4 மற்றும் 6 விழுக்காட்டு ஆதரவு) ஆகியோர் உள்ளனர்.
ஜசெகவை சேர்ந்த கோபிந்த் சிங் டியோ, பொருளாதார அமைச்சர் ரபிஸி
ரம்லி, டான்ஸ்ரீ நோ ஓமார், தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருள் தெங்கு அப்துல்
அஜிஸ் ஆகியோர் சிறிதளவு ஆதரவுடன் அடுத்த நிலையில்
இருக்கின்றனர்.
இதனிடையே, 61 விழுக்காட்டு அனைத்து இன வாக்காளர்களும் 58 மலாய்
வாக்காளர்களும் கட்சியை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளரைத்
தேர்ந்தெடுப்பதாக இந்த ஆய்வில் கூறியுள்ளனர். அதற்கு அடுத்த
நிலையில் மதம், பொருளாதாரம் மற்றும் இனம் போன்ற அம்சங்களை
அவர்கள் கருத்தில் கொள்கின்றனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 34 தொகுதிகளில் உள்ள மூவினங்களையும்
சேர்ந்த 1,068 பேர் இந்த ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த ஜூலை
22 முதல் 28 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 67.8 விழுக்காட்டு
மலாய்க்காரர்களும் 15.6 விழுக்காட்டுச் சீனர்களும் 12.4 விழுக்காட்டு
இந்தியர்களும் 4.2 விழுக்காட்டு பிற இனத்தவர்களும் பங்கு கொண்டனர்.
அவர்களில் 45 விழுக்காட்டினர் மாதம் 4,850 வெள்ளிக்கும் குறைவாக
வருமானம் பெறும் பி40 தரப்பினராக உள்ள வேளையில் மாதம் வெ.4,850
முதல் வெ.10,959 வரை வருமானம் பெறும் எம்40 தரப்பினர் 40
விழுக்காடாகவும் மாதம் 10,959 வெள்ளிக்கும் மேல் வருமானம் பெறும்
டி20 தரப்பினர் 15 விழுக்காடாகவும் உள்ளனர்.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து 1,068 பேரில் 70 விழுக்காட்டு
மலாய்க்காரர் அல்லாதவர்களும் 68 விழுக்காட்டு மலாய்க்காரர்களும்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை
குறைப்பதற்கும் அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து எதுவும்
அறியாமல் இருக்கின்றனர் என்பதுதான் இந்த ஆய்வின் வழி தெரியவந்த
கவலையளிக்கும் விஷயமாகும்.








