கோலாலம்பூர், ஆக 6- உலு சிலாங்கூரிலுள்ள செரெண்டா மறுவாழ்வு
மையத்திலிருந்து நேற்று தப்பியோடிய மூவரை போலீசார் வலைவீசி தேடி
வருகின்றனர்.
அந்த முகாமின் அல்-அஸிம் விடுதியிலிருந்து இருவரும் அல்-ஹம்சா
விடுதியிலிருந்து ஒருவரும் தப்பியதாக உலு சிலாங்கூர் மாவட்டப்
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசால் கூறினார்.
அந்த முகாமில் நேற்று காலை நடைபெற்ற ஒன்று கூடும் நிகழ்வில் 44
முதல் 55 வயது வரையிலான அம்மூவரும் கலந்து கொள்ளவில்லை
என்றும் தங்கள் விடுதி பொறுப்பாளர்களின் அனுமதியின்றி முகாமை
விட்டு அவர்கள் வெளியேறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த மூன்று பேரும் உயரமான கம்பி வேலியில் ஏறிக் குதித்து
தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
தப்பியோடிய மூவரையும் தேடும் பணியை போலீசார்
தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், மீண்டும் பிடிபடும் வரை அவர்கள்
கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
அந்த மூவரும் அந்த மையத்தில் புனர்வாழ்வு சிகிச்சை பெற்று வந்தது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம்
தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 224வது பிரிவின் கீழ் விசாரணை
அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.








