ஈப்போ, ஆக 4- பூட்டப்பட்ட வீட்டின் இரும்பு கேட்டின் வழியாக பசிக்கு
உணவு கேட்ட நான்கு வயது சிறுவனின் பரிதாப நிலை, அண்டை
வீட்டாரின் கவனத்தை ஈர்த்து அச்சிறுவன் தாயார் மற்றும் அவரின்
காதலரின் துன்புறுத்தலிலிருந்து மீட்கப்படுவதற்கு உதவி புரிந்தது.
உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டில் தனித்துக் காணப்பட்ட
அச்சிறுவன் பின்னர் போலீசாரின் உதவியுடன் அவ்வீட்டிலிருந்து
மீட்கப்பட்டான்.
மெங்கெளும்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்
பராமரிப்பாளர்களால் சித்தரவதை செய்யப்பட்டதாக க கூறப்படும்
அச்சிறுவன் பற்றியத் தகவலை நேற்று முன்தினம் மாலை 4.30
மணியளவில் தாங்கள் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.
உடல் முழுவதும் காயங்களுடன் பசியோடு காணப்பட்ட அச்சிறுவனைக்
கண்ட பொது மக்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். இச்சம்பவம்
தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் அறிக்கை ஒன்றில்
கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் 25 மற்றும் 23 வயதுடைய ஆடவர் மற்றும்
பெண்னை தாங்கள் அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு
விசாரணைக்காக தடுத்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த சிறுவனை அடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரப்பர்
குழாய் மற்றும் பிரம்பை சம்பவ இடத்திலிருந்து தாங்கள்
மீட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அந்த ஆடவன் பழைய அட்டைப் பெட்டிகளைச் சேகரிப்பவராகவும்
பெண்மணி பாத்திரம் கழுபவராகவும் வேலை செய்து வந்ததாக கூறிய அவர், அவ்விருவரையும் எதிர்வரும் 7ஆம் தேதி வரை விசாரணைக்காக
தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைத் தாங்கள்
பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.








