கோலாலம்பூர், ஆக 1- வங்கிக் கணக்கு எண்களை மட்டும் பிறருடன்
பகிரும் நடவடிக்கை பணம் களவாடப்படுவதற்கான சாத்தியத்தை
ஏற்படுத்தாது என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை
இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.
ஆயினும், வங்கிக் கணக்குடன் டி.ஏ.சி. எனப்படும் பரிமாற்ற அங்கீகாரக்
குறியீடு அல்லது கடவுச் சொல்லையும் பகிர்வது இணையம் வாயிலாக
சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை ஊடுருவுவதற்கான வாய்ப்பினை
ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.
வங்கிக் கணக்கு எண்களை மட்டும் வழங்குவதால் எந்த பாதிப்பும்
ஏற்படாது. பணத்தை மீட்பதற்கு சம்பந்தப்பட்ட நபர் பல நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டும். வங்கிக் கணக்கு எண் தவிர்த்து கூடுதல் விபரங்களை
வழங்குவதும் அதில் அடங்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
வங்கிக் கணக்கு எண்ணுடன் கடவுச் சொல்லையும் வழங்கினால் நீங்கள்
பெரும் சிக்கலை எதிர்நோக்க வேண்டி வரும் என்று அவர் மேலும்
சொன்னார்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல பணம்
தருவதாகக் கூறி வங்கிக் கணக்கை கேட்கும் மோசடிச் சம்பவங்கள்
நிகழ்ந்து வருவதாக வாட்ஸ்ஆப் எனும் புலனம் வாயிலாக பரவி வரும்
தகவல் குறித்து கருத்துரைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த மோசடிக்கு சில தரப்பினர் பலியாகி 1,900 வெள்ளி வரை
இழந்துள்ளதாக அந்த தகவல் கூறியது.
இவ்விவகாரத்தில் வங்கித் தரப்பினரும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை
அமல்படுத்தியுள்ளதாக கூறிய ரம்லி, பணப்பரிமாற்றம் செய்வது
தொடர்பில் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் தெரிந்த சங்கேத
வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் அதில் அடங்கும் என்றார்.








