கோலாலம்பூர், ஜூலை 29- சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில்
நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இன்று காலை வேட்பு
மனுத்தாக்கல் நடைபெறவுள்ளது. அம்மாநிலங்களில் உள்ள அனைத்து 173
வேட்பு மனுத் தாக்கல் மையங்களும் இன்று காலை 9.00 மணிக்கு
திறக்கபட்டுள்ளன.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், திரங்கானு
ஆகிய அந்த ஆறு மாநிலங்களில் போட்டியிடும் அரசியல் கட்சி
வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவை
தேர்தர் அதிகாரியிடம் சமர்ப்பிப்பதற்கு இன்று காலை 10.00 மணி வரை
அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆறு மாநிலங்களிலும் உள்ள 245 தொகுதிகளோடு கோல திரங்கானு
நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும்
இன்று நடைபெறுகிறது.
கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில்
அத்தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் டத்தோ அகமது அஸ்மாட்
ஹஷிம் பெற்ற வெற்றி செல்லாது என திரங்கானு தேர்தல் நீதிமன்றம்
கடந்த ஜூன் 27ஆம் தேதி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த தொகுதி
காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மாநிலத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்கு 14
நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும்
தங்களின் பிரசாரத்தை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 11ஆம் தேதி நள்ளிரவு 11.59
மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி
நடைபெறவுள்ள வேளையில் தொடக்க வாக்களிப்பு வரும் ஆகஸ்டு 8ஆம்
தேதி நடைபெறவிருக்கிறது.








