ஷா ஆலம், ஜூலை 29- வலுவான தேர்தல் இயந்திரம் மற்றும் தீவிரப்
பிரசாரத்தின் வழி உலு கிளாங் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி வெற்றி பெற முடியும் என்று
சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ முகமது
அஸ்மின் அலியின் ஆதரவு சரிந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த
நம்பிக்கையை தாம் வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.
கெஅடிலான் கட்சியிலிருந்து அஸ்மின் வெளியேறியப் பின்னர் தனது
தேர்தல் இயந்திரத்தில் 70 விழுக்காட்டு ஆதரவை அவர் இழந்து விட்டார்.
கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் தோல்வி கண்டப் பின்னர்
ஒட்டுமொத்த தேர்தல் இயந்திரத்தையும் அவர் இழந்து விட்டார் என்றார்
அவர்.
நேற்று இங்குள் சஹாயா ஆலமில் ரூமா இடாமான் சஹாயா வீடமைப்புத்
திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
உலு கிளாங்கை பூர்வீகமாகக் கொண்ட ஜூவாய்ரியாவின் ஆற்றல் மீது
தாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அமிருடின் கூறினார்.
கெஅடிலான் தேர்தல் இயந்திரம் மற்றும் உலு கிளாங் அமானா
கட்சியினரின் ஆதரவு ஹராப்பான் வேட்பாளரின் வெற்றிக்குப் பெரிதும்
துணை புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








