குவாந்தான், ஜூலை 27: செவ்வாய்கிழமை இரவு தொடங்கி கிலோமீட்டரில் 66.1இல் சாலை உள்வாங்கியதால் முற்றிலுமாக மூடப்பட்ட கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலையின் (KLK) ஒரு பகுதி கிழக்கிற்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த பாதை மீண்டும் திறக்கப் படுவதை கோலாலம்பூர்-காராக் விரைவுச்சாலை, ANIH பெர்ஹாட் ஆல் முகநூல் மற்றும் ட்விட்டரில் உறுதி செய்யப்பட்டது.
"இருப்பினும், கோலாலம்பூருக்குச் செல்லும் பயனர்கள் இன்னும் மாற்று வழியைப் பயன்படுத்த வேண்டும், இது கிழக்கு பெந்தோங் சந்திப்பில் இருந்து வெளியேறி மேற்கு பெந்தோங் சந்திப்பில் மீண்டும் நுழைய வேண்டும்" என்று ANIH பெர்ஹாட் தெரிவித்தது.
பெந்தோங் டோல் பிளாசாவிற்கு அருகில் உள்ள சாலை உள்வாங்கியதால் இரு திசைகளிலும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மூடுவதாக ANIH பெர்ஹாட் அறிவித்தது.
மலேசிய ரயில் இணைப்பு (MRL) இன் முதற்கட்ட விசாரணையில், கிழக்கு கடற்கரை ரயில் பாதையின் 2ஆம் சுரங்கப்பாதை (ECRL) சரிந்ததால் சாலை உள்வாங்கிய இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பொதுப்பணித்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய ரயில் இணைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
– பெர்னாமா








