புக்கிட் மெர்தஜாம், ஜூலை 20: இங்குள்ள ஜாலான் தோடக் 4, செபராங் ஜெயாவில் உள்ள 20 மீட்டர் உயரமுள்ள மரக்கிளையில் சிக்கி புத்தி சுவாதீனம் இல்லாத ஒருவரை தீயணைப்பு துறை மீட்டது.
காலை 8.08 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்த உடன் பேராய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றதாக பினாங்கில் உள்ள மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
"தீயணைப்புத் துறை அவ்விடத்திற்கு வந்த போது, சுமார் 20 மீட்டர் உயரமுள்ள மரத்தில் ஒரு நபர் சுயநினைவின்றி இருந்தது கண்டறியப்பட்டது. பிறகு, ஏணியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை கீழே கொண்டு வர முற்பட்டோம்.
மேல் நடவடிக்கைக்காக அந்நபரை, காவல்துறை மற்றும் சுகாதார அமைச்சிடம் (கேகேஎம்) ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். காலை 9.36 மணி அளவில் பாதிக்கப் பட்டவரை மீட்கும் நடவடிக்கை முழுமையாக முடிவடைந்தது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா








